சட்டவிரோத குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் தொடர்பிருப்பதாகக் கூறி, 63 முதல் 77 வயதிற்குட்பட்ட ஆடவர் அறுவரைக் காவல்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது.
ஈசூன் அவென்யூ 5ல் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின்போது, இடைத்தரகராகச் செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் 63 வயது ஆடவர் ஒருவரைக் கைதுசெய்ததாகக் காவல்துறை திங்கட்கிழமையன்று (மார்ச் 18) தெரிவித்தது.
எஞ்சிய ஐவரும் அந்த ஆடவரிடம் பந்தயம் கட்டியதாக நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற சோதனைகளின்போது 4,500 வெள்ளிக்கும் மேற்பட்ட ரொக்கம், ஒரு கைப்பேசி,சூதாட்டத் துணைக்கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.
சட்டவிரோதப் பந்தயப் பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிக்கு $200,000 வரை அபராதமும் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
உரிமமின்றி சூதாட்டச் சேவை வழங்குநரிடம் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதம் வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.