தமிழர்களின் பாரம்பரியக் கூறுகளில் ஒன்றான ‘விரும்தோம்பல்’ குறித்த பயிலரங்கம் இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏப்ரல் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
வாழை இலை விருந்து, அதன் சிறப்புகள், அறுசுவை உணவு வகைகள், அவை பரிமாறப்படும் விதம், அவற்றை உண்ணும் முறை என அனைத்தையும் விளக்கவிருக்கிறார் பயிலரங்கின் நெறியாளர் ஜாய்ஸ் கிங்ஸ்லி.
தமிழர்களின் பாரம்பரியத்தை அனுபவபூர்வமாக உணரும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் திருமதி ஜாய்ஸ்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவரும் இவர், அனைத்து இனத்தவரும் ஆர்வத்துடன் இதில் கலந்துகொள்வதாகவும் அவர்களுக்கு இவற்றைக் கற்றுத்தருவது தமக்கு பெருமையாக உள்ளதாகவும் சொல்கிறார்.
இந்தப் பயிலரங்கில், வாழை இலை விரிக்கப்பட்டு, உப்பு, இனிப்புடன் தொடங்கி, முழு உணவு பரிமாறப்படுவதுடன் கூட்டு, பொரியல், வறுவல் எனத் தமிழர்கள் சமைக்கும் முறையும் பகிரப்படுகிறது.
ஒவ்வோர் உணவின் முக்கிய அம்சமும் அதன் தனிச்சிறப்பும் விளக்கப்படுகிறது. தமிழர் உணவுக்கும், மலையாளிகள் போன்ற மற்ற பல தென்னிந்தியர்களின் உணவுக்கும் உள்ள ஒற்றுமைகள், வேறுபாடுகள் ஆகியவையும் எடுத்துக்கூறப்படுகின்றன.
இவை தவிர, சிக்குக் கோலம், ரங்கோலி, சிறு கைவினைப் பொருள்களைச் செய்யும் முறை ஆகியவை குறித்தும் விளக்கப்படும்.
சித்திரைத் திருநாளன்று, நம் பாரம்பரியக் கூறுகளை, அடுத்த தலைமுறைக்கும் பிற இனத்தவர்க்கும் கொண்டுசேர்ப்பது பெருமை என்கிறார் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைமை மேலாளர் மரியா பவானி தாஸ் .