ஒரு தொடக்கக் கல்லூரி ஆசிரியர் உட்பட மேலும் மூவர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக இன்று (பிப்ரவரி 7) சுகாதார அமைச்சு அறிவித்தது.
மூவருக்கும் இதற்குமுன் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அத்துடன் இம்மூவரும் சீனாவுக்குப் பயணமும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் 14 சிங்கப்பூரர்கள் உட்பட நாட்டில் 33 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இதுவரை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.
எஞ்சிய 31 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்பட்டது.
ஆனால் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று உறுதியான மூன்று புதிய சம்பவங்கள்:
முதல் சம்பவம் 53 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் தொடர்பானது. அவர் அண்மையில் சீனாவுக்குப் பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் சென்ற மாதம் 6, 11, 17 ஆகிய தேதிகளில் மலேசியாவில் இருந்தார். தற்போது அவர் சாங்கி பொது மருத்துவமனையின் சிறப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 24ல் வசிக்கும் இவர், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன் சீனப் புத்தாண்டுக்காக உறவினர்கள், நண்பர்களின் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரண்டாவது சம்பவம் 42 வயதுடைய சிங்கப்பூர் மாது ஒருவர் தொடர்பிலானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவருக்கு கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.
பின்னர் புதன்கிழமையன்று பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மறுநாள் அவருக்குக் கிருமித் தொற்று இருப்பது உறுதியானது.
விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 14 நாட்கள் கட்டாய விடுப்பு தரப்பட்டுள்ளது.
மூன்றாவது சம்பவத்தில் 39 வயது சிங்கப்பூர் மாது கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மலேசியாவில் சென்ற மாதம் 22 முதல் 29ஆம் தேதி வரை தங்கியிருந்தார்.
தற்போது செங்காங் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சென்ற மாதம் 30ஆம் தேதிநோய்க்கான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குச் சென்றார். இவருக்குக் கிருமித் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதியானது.
இம்மூவர் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, நாளைய தமிழ்முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்.
#தமிழ்முரசு #கொரோனா #சிங்கப்பூர் #33