லிட்டில் இந்தியாவின் சையது ஆல்வி ரோட்டில் உள்ள முஸ்தஃபா சென்டரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடி காலத்தில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முஸ்தஃபா சென்டரிலும் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்று முஸ்தஃபா சென்டரின் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் முஸ்தஃபா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான திரு முஸ்தாக் அகமது தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டுகளைப் புதுப்பிக்க முடியாது எனவும் அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான விமானச் சீட்டுக்கான கட்டணத்தை அது செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 27ஆம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், அந்த ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“இத்தகைய முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வருத்தம் தெரிவித்த திரு முஸ்தாக், வர்த்தகம் விரைவில் சீரடையும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
தற்போது எத்தனை வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள், எத்தனை பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர் என்பது போன்ற விவரங்களை முஸ்தஃபா சென்டரிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோரியது.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து பணிக்கு அழைக்கப்படாத ஊழியர்களுக்கு ஆதரவுத் தொகையாக மாதந்தோறும் $300 வழங்கி வந்தது அந்நிறுவனம்.
ஊழியர்களின் ஊதியம் தொடர்பான செலவுகளைக் குறைக்க வேண்டிய தேவை இருப்பதால், அந்த ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று முஸ்தஃபா சென்டர், ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு வேலைக்கு அழைக்கப்படாதவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளவும் அந்நிறுவனம் ஊக்குவித்தது.
கொவிட்-19க்கு முந்தைய காலத்தைப் போன்ற அளவுக்கு வர்த்தகம், எதிர்பார்க்கப்பட்டதைவிட நீண்ட காலம் பிடிக்கலாம்.
வேலையை ராஜினாமா செய்ய விரும்பும் ஊழியர்கள் காத்திருப்பு கால அறிவிப்புக் கடிதம் (notice period) எதுவும் வழங்கத் தேவையில்லை என்றும் திரு முஸ்தாக் தெரிவித்தார். அவ்வாறு வேலையை ராஜினாமா செய்வோருக்கு, தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஒரு மாத அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சில ஊழியர்கள் வேறு இடங்களில் வேலை தேடத் தொடங்கியுள்ள நிலையில், காத்திருப்பு கால அறிவிப்புக் கடிதம் வழங்குவதிலிருந்து விலக்கு கோரியிருந்தனர்.
சிங்கப்பூர் கையேடு மற்றும் வணிகத் தொழிலாளர் சங்கம் (SMMWU), e2i எனப்படும் வேலை நியமன, வேலைத்தகுதி கழகம், என்டியுசி ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு, தங்களது ஊழியர்களுக்கு மாற்று வேலைகளை ஏற்பாடு செய்யும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
முஸ்தஃபா நிலையத்தில் கொவிட்-19 குழுமம் கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முஸ்தஃபா நிலையம் மூடப்பட்டது.
பல ஆயிரக் கணக்கில், விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக அது கருதப்படுகிறது.
முஸ்தஃபா சென்டருக்குச் சென்று வந்த பல ஊழியர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களிடமிருந்து, உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உடன் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கும் கிருமித்தொற்று பரவியது.
கடந்த மே மாதம் 6ஆம் தேதி நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்குத் திரும்பியபோது அது காலை 9.30 முதல் இரவு 11.30 மணிவரை மட்டுமே செயல்பட்டது. படிப்படியாக, முன்னைப்போலவே 24 மணி நேர சேவையைத் தொடர அது விரும்பியது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்த நிலையில், நடைமுறைச் செலவினங்களைக் குறைப்பதற்காக, கடை மீண்டும் 24 மணி நேரத்துக்குச் செயல்படுத்தப்படவில்லை.
வெளிநாட்டு ஊழியர்கள், சுற்றுப் பயணிகள் போன்றோர் முஸ்தஃபா நிலையத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்த நிலையில், அவர்களின் வருகை சாத்தியமில்லாமல் இருக்கும் இந்தச் சூழலில் கடையை 24 மணி நேரத்துக்குத் திறப்பது அர்த்தமற்றது என அங்கு பணிபுரியும் மேலாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தகவல்கள் தமிழ் முரசு இணையப்பக்கத்தில்...: https://www.tamilmurasu.com.sg/jobs