சிங்கப்பூர், செங்காங் பொது மருத்துவமனைகளில் விபத்து, அவசரகாலப் பிரிவுகளுக்கு வரும் நோயாளிகள் அதிகரிப்பு
சிங்கப்பூர் பொது மருத்துவமனையும் செங்காங் பொது மருத்துவமனையும், தங்களது விபத்து மற்றும் அவசரகாலப் பிரிவுகளுக்கு மருத்துவ உதவி நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
தற்போதைய சூழலில் தனது வார்டுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக செங்காங் பொது மருத்துவமனை இன்று (மே 1) வெளியிட்ட அதன் ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
கவலைக்கிடமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இரு மருத்துவமனைகளும் தங்களது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளன. மற்ற நோயாளிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்றும் அவை கூறின.
மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே உடனிருக்கலாம்.
அவசர நிலையில் இல்லாதோர் பொது மருத்துவரையோ பலதுறை மருந்தகத்தையோ நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
செங்காங் பொது மருத்துவமனையில் ஏறத்தாழ 1,000 படுக்கைகளும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஏறக்குறைய 1,700 படுக்கைகளும் உள்ளன.
டான் டோக் செங் மருத்துவமனையில் கொவிட்-19 குழுமம் உருவெடுத்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு நான்கு வார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூர், செங்காங் பொது மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கும் டான் டோக் செங் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அண்மைய நிலவரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.