ஆசிரியருக்கும் மாணவருக்கும் கிருமித்தொற்று; வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு முன்னதாகவே மாறிவிட்ட இரு தொடக்கப்பள்ளிகள்
ஃபூச்சுன் தொடக்கப்பள்ளி, ஃபிரான்டியர் தொடக்கப்பள்ளி ஆகிய இரு தொடக்கப்பள்ளிகள் இரு நாட்களுக்கு முன்னதாக இன்று (மே 17) வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு மாறிவிட்டன.
ஆசிரியர் ஒருவருக்கும் மாணவர் ஒருவருக்கும் நேற்று (மே 16) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளிகள் இந்த நடைமுறைக்கு மாறின.
பள்ளிகளில் கொவிட்-19 நோய் பரவும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கிடையே, மகா போதி பள்ளி மாணவி ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் சென்றிருந்த அதே மாணவர் பராமரிப்பு மையத்திற்கு அந்த மாணவியும் சென்றிருந்ததைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.