விக்டோரியா தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு நேற்று (மே 7) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று (மே 8) தெரிவித்துள்ளது.
சமூகத்தில் கிருமிப் பரவலைத் தடுக்க, கிருமி தொற்றிய அந்த மாணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 95 மாணவர்களும் எட்டுப் பணியாளர்களும் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
நாளை மறுதினத்திற்குள் (மே 10) விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள், அக்கல்லூரியில் செயல்படும் கடைக்காரர்கள், அக்கல்லூரிக்குச் சென்ற வருகையாளர்கள் என ஏறக்குறைய 2,200 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
கிருமி தொற்றிய அந்த மாணவர் கடைசியாக புதன்கிழமை கல்லூரிக்குச் சென்றிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவருக்கு சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் ஏற்பட்டன. அன்றைய தினம் அவர் மருத்துவரிடம் சென்றார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அவருக்குத் தொற்று உறுதியானது.
இந்நிலையில், விக்டோரியா தொடக்கக் கல்லூரி வளாகம் முழுவதுமாக சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சு கூறியது.
நாளை மறுதினம் (மே 10) முதல் மே 14 வரை அக்கல்லூரி மாணவர்கள் இல்லத்தில் இருந்தவாறு பாடங்களைக் கற்பர். கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் இறுதிப்படுத்தப்படுவதற்கான கால அவகாசத்தை இந்த ஏற்பாடு வழங்கும்.