அக்டோபர் 30ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு ஊழியர்கள் 3,000 பேர் வரை லிட்டில் இந்தியாவுக்கும் கேலாங் சிராய்க்கும் வாரந்தோறும் செல்லலாம். அவர்கள் அங்கு எட்டு மணிநேரம் வரை இருக்கலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது என்று மனிதவள அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) தெரிவித்தது.
இந்நிலையில், பொழுதுபோக்கு நிலையங்களுக்கு ஊழியர்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகள் மேலும் தளத்தப்படுவதாகவும் அமைச்சு கூறியது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று முறை வரை பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்.
அங்கு செல்வதற்கு முன்பு ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்துகொள்ள இனி தேவையில்லை.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களும் வாரத்திற்கு மூன்று முறை வரை பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம். ஆனால், அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனையிலோ (rostered routine testing) பொழுதுபோக்கு நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு செய்துகொண்ட ‘ஏஆர்டி’ பரிசோதனையிலோ ‘தொற்று இல்லை’ என்ற முடிவைக் காட்ட வேண்டும்.
கடந்த மாதம் நடப்புக்கு வந்த முன்னோடித் திட்டத்தின்கீழ், 30 தங்குவிடுதிகளைச் சேர்ந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 700 ஊழியர்கள் வரை லிட்டில் இந்தியாவுக்குச் சென்று வந்தனர். பயணத்திற்கு முன்பும் பின்பும் அவர்கள் ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்துகொண்டனர்.