கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் கொவிட்-19 தடுப்பூசி நிலையை இழந்த 21,800 பேரில் 48 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்தார்.
பதினான்கு விழுக்காட்டினர் நிரந்தரவாசிகள், எஞ்சிய 38 விழுக்காட்டினர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் என்று திரு ஓங் தெரிவித்தார்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கு முன்வைக்கப்படும் பொதுவான காரணங்களை அவர் சுட்டினார்.
“தாங்கள் பெரும்பாலும் வெளியே செல்லாதது, முதலிரு தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பு போதுமானது என்பதை உணர்வது, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க விரும்புவது உள்ளிட்டவை அந்தக் காரணங்களில் அடங்கும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரர் அல்லாதோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கான காரணத்தை சுகாதார அமைச்சால் உறுதிப்படுத்த இயலவில்லை என்று திரு ஓங் சொன்னார். என்றாலும், அத்தகையோரில் பலர் வெளிநாடுகளில் இருப்பதாகத் தெரிகிறது.