பொதுவாக நம் கண்ணில் சிறிய மதிப்பிலான பணமோ நாணயங்களோ கிடைத்தால் அது பற்றி அதிகம் சிந்திக்கமாட்டோம். மதிப்பு குறைவு என்பதால் பெரும்பாலும் அதை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க ஏனையோர் யோசிப்பதில்லை.
ஆனால் கையில் கிடைத்த மலேசியா RM 1 ரிங்கிட் தாளை உரியவரிடம் கொடுக்க முழு வீச்சில் இறங்கிவிட்டார் ஒரு மலேசிய பெண்மணி.
லிட்டில் இந்தியாவில் உள்ள பணம் மாற்றும் வர்த்தகரிடமிருந்து கிடைத்த பணத்தில் ஒரு தாளில் காதல் சின்னத்தையும் ஒரு காதல் ஜோடியின் பெயர்களையும் பார்த்தபோது மணியரசி முனுசாமியின் இதயத்தில் ஒரு நெருடல்.
ஒரு ரிங்கிட் மலேசிய தாளில் இருவரின் பெயர்கள், ஒரு இதயத்தின் படம் ஆகியவை வரையப்பட்டு, ஜூன் 12, 2005 என்ற தேதியும் எழுதப்பட்டிருந்தது.
அதைக் கண்டதும் 40 வயது மணியசரசிக்கு தமது வாழ்வில் அன்று நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
அப்போது அவருடைய காதலரிடம் தமது காதலை வெளிப்படுத்த இதே போன்ற மலேசிய 1 ரிங்கிட் தாளில் தனது பெயரையும் தனது காதலரின் பெயரையும், ஒரு காதல் சின்னத்தையும் வரைந்த மணியரசி அதனை ஒரு சட்டைபோல் தைத்து தமது காதலருக்குக் காதல் பரிசாகவும் கொடுத்துள்ளார்.
அப்போதைய தமது காதலரை மணமுடித்து மூன்று பிள்ளைகள் உடைய மணியரசிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு மணமுறிவு ஏற்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் உணவு பானத் துறையில் பணியாற்றி வரும் இவர் கடந்த ஈராண்டுகளாகத் தாயகம் செல்ல முடியாமல் சிங்கப்பூரிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். ஜோகூர் பாருவைச் சேர்ந்த அவரது இரு மகள்களுக்கும் வயது 15, 13. கடைக்குட்டி மகனுக்கு 12 வயது. மூவரையும் அவரது தமக்கை மலேசியாவில் பராமரித்து வந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில்தான் முதல்முதலில் விடிஎல் திட்டத்தில் மலேசியாவுக்குச் சென்று வந்துள்ளார். இம்மாதம் முதலாம் தேதி சிங்கப்பூர்-மலேசிய எல்லை திறந்த பிறகு மீண்டும் அங்கு சென்ற அவர் அண்மையில் தமது சிங்கப்பூர் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு மீண்டும் ஜோகூருக்குத் திரும்பிவிட்டார். தற்போது தினமும் அங்கிருந்து சிங்கப்பூர் வந்து பணியாற்றுகிறார்.
"இதற்குத்தானே இத்தனை நாள்கள் காத்திருந்தோம். பிள்ளைகளைப் பார்க்காமல் அதிக மன உளைச்சல், மன வேதனை ஆகியவற்றுக்கு ஆளானேன். ஆனால் இப்போது ஒரு வழியாக வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக உணர்கிறேன்," என்றார் மணியரசி.
இம்மாதம் 3ஆம் தேதி லிட்டில் இந்தியாவுக்குச் சென்ற போது அங்குலியா பள்ளிவாசலுக்கு அருகே உள்ள ஒரு நாணய மாற்று வர்த்தகரிடம் பணம் மாற்றியுள்ளார் மணியரசி. அப்போதுதான் அந்த தாள் அவரது கண்ணில் பட்டது.
அதன் மதிப்பு சிங்கப்பபூரில் கிட்டத்தட்ட 30 காசுகள்தான் ஆனால் பணத்தின் மதிப்பு பெரிதல்ல என்றும் அந்த காதல் சின்னமும் அதன் மதிப்பும் அளவிட முடியாது என்றும் கூறினார் மணியரசி.
அதனால் தமது கையில் கிடைத்த பணத்தாளையும் அந்த காதல் ஜோடியிடம் ஒப்படைக்க விரும்பினார். Malaysia-Singapore Border Crossers(MSBC) 马新过境者 எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்தத் தாளின் புகைப்படத்தைப் பதிவிட்டு தாளின் உரிமையாளரைத் தேடும் படலத்தில் ஈடுபட்டுவிட்டார்.
மலேசியர்கள் அதிகம் செல்லும் அந்த ஃபேஸ்புக் குழுவில் 167,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
அந்த ஜோடி ஒன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் இந்த காதல் சின்னத்தைக் கண்டு அவர்கள் இதயங்கள் நெகிழும் என்று அவர் நம்புகிறார். பணத்தாளில் எழுதிய ஜோடி கிடைக்கும்வரை அந்த தாள் தம்மிடம் பத்திரமாக இருக்கும் என்றார் மணியரசி.