சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் தன்னுடைய ஊடக தொழில்களைச் சீரமைத்து புதிய லாபநோக்கமற்ற நிறுவனத்தை அமைக்கிறது. அந்தப் புதிய நிறுவனத்திற்கு முன்னாள் அமைச்சர் கோ பூன் வான் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
அந்தப் பொறுப்புக்குத் திரு கோ சரியானவர் என்று எஸ்பிஎச் நிறுவனத்தின் இப்போதைய நிர்வாக பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டு இருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இன்று (மே 10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
புதிய லாபநோக்கமற்ற நிறுவனம் ஓர் உத்தரவாத நிறுவனமாகச் செயல்படும். எஸ்பிஎச் நிறுவனத்தின் ஊடகத் தொழில்கள் அந்தப் புதிய நிறுவனத்தின்கீழ் வரும்.
எஸ்பிஎச் நிறுவனத்தின் ஊடகத் தொழில்களின் சீரமைப்பு, அதன் பங்குதாரர்களின் அங்கீகாரத்துக்கு உட்பட்டது.
பல்வேறு உயர் பதவிகளில் 25க்கும் அதிக ஆண்டுகள் பொதுச் சேவை அனுபவத்துடன் கூடிய திரு கோ, அந்தப் புதிய நிறுவனத்திற்கு வலுவான உத்திபூர்வ தலைமைத் துவத்தை வழங்குவார் என்று அமைச்சர் திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
புதிய நிறுவனத்துக்குத் தலைவர் பொறுப்பை ஏற்க திரு கோ ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
திரு கோ 19 ஆண்டுகால சேவைக்குப் பிறகு அரசியலில் இருந்து 2020ல் ஓய்வு பெற்றார்.
கடைசியாக அவர் உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார்.