குறைந்த வருமானம் ஈட்டும் ஏறக்குறைய 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள் இம்மாதத்தில் இருந்து பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டு வழங்குதொகைகளைப் பெறுவர் என்று நிதியமைச்சு இன்று (ஜூன் 1) தெரிவித்தது.
தகுதியுடையவர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு வழங்குதொகை தானாகவே வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 950,000 சிங்கப்பூர் குடும்பங்களுக்கு, காலாண்டு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யு-சேவ் தள்ளுபடியும் சிறப்புத் தொகையும் அடுத்த மாதம் வழங்கப்படும் என்று அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாகவே ரொக்க வழங்கீடுகளைப் பெறுவதற்கு இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சிங்கப்பூரர்கள் தங்களது அடையாள எண்களை ‘பேநவ்’ வசதியுடன் இணைக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் ‘$200 ரொக்க சிறப்புத் தொகை’ இம்மாதம் 23ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் போடப்படும்.
ஜூன் 15ஆம் தேதிக்குள் ‘பேநவ்’வுடன் அடையாள எண்ணை இணைக்காமல், அதே நேரத்தில் தங்களது வங்கிக் கணக்கு எண்களை முன்கூட்டியே தெரிவித்து இருப்போருக்கு இம்மாதம் 30ஆம் தேதியன்று வங்கிப் பரிமாற்றம் மூலம் அத்தொகை வழங்கப்படும்.
எஞ்சியோருக்கு அடையாள அட்டைகளில் உள்ள முகவரிகளுக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து காசோலை அனுப்பப்படும்.
இவ்வாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட $900 மில்லியன் இல்ல ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மொத்தம் $280 மில்லியன் மதிப்பிலான இந்த ரொக்க சிறப்புத் தொகை வழங்கப்படுகிறது.
வழக்கமான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு வழங்குதொகை முறையில் வழங்கப்படும் $300, ஜூலை 30ஆம் தேதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் போடப்படும். அதற்கு, ஜூலை 20ஆம் தேதிக்குள் அவர்கள் தங்களின் அடையாள எண்களை ‘பேநவ்’வுடன் இணைக்க வேண்டும்.
அத்தேதிக்குள் ‘பேநவ்’வுடன் அடையாள எண்ணை இணைக்காமல், அதே நேரத்தில் தங்களது வங்கிக் கணக்கு எண்களை முன்கூட்டியே தெரிவித்திருப்போருக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று வங்கிப் பரிமாற்றம் மூலம் அத்தொகை வழங்கப்படும்.
எஞ்சியோருக்கு அவர்களின் அடையாள அட்டைகளில் உள்ள முகவரிகளுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதியில் இருந்து காசோலை அனுப்பப்படும்.
இந்த வகையில், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் மொத்தம் ஏறத்தாழ $405 மில்லியன் வழங்கப்படும்.
அத்துடன், வரும் ஜூலை 30ஆம் தேதியில் இருந்து, 65 மற்றும் அதற்குமேல் வயதுடைய ஏறக்குறைய 575,000 சிங்கப்பூரர்களின் மசே நிதி மெடிசேவ் கணக்குகளில் $450 வரை நிரப்பப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வகையில், மொத்தம் கிட்டத்தட்ட $170 மில்லியன் வழங்கப்படும்.
ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் உதவிபெற சிங்கப்பூரர்கள் இன்றில் இருந்து பதிவுசெய்யலாம். அரசாங்கத்தின் வழங்குதொகையைப் பெற ஏற்கெனவே பதிவுசெய்து கொண்டோர் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை.