குழந்தைப் பருவத்திற்குப் பின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது, தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் சிக்கனமான வழிமுறைகளில் ஒன்று என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
வயது ஏற ஏற ஒருவரின் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து, சளிக்காய்ச்சல், நுரையீரல் அழற்சி போன்ற தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். இது மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வித்திடலாம்.
நோய்த் தடுப்பில் தடுப்பூசி செயல்திறன்மிக்கதாக இருந்து வந்தாலும், உலகின் பிற பகுதிகளை ஒப்புநோக்க, தென்கிழக்காசியாவில் வாழ்நாளின் ஒவ்வொரு கட்டத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவாகவே உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள 75% தடுப்பூசி இலக்கைக் காட்டிலும் ஆசியானில் குறிப்பிடத்தக்க குறைவாகவே தடுப்பூசி போடப்படுவதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் சளிக்காய்ச்சலுக்கு 14 விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மாறாக, இவ்விகிதம் பிரிட்டனில் 75 விழுக்காடாகவும் தென்கொரியாவில் 83 விழுக்காடாகவும் உள்ளது.
மேற்கு பசிபிக் மருந்தியல் மன்றத்தின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் - ஆசியான் வர்த்தக மன்றம், கணக்கியல் நிறுவனமான கேபிஎம்ஜி, சனோஃபி மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
“வாழ்நாள் முழுமைக்குமான தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவு அதிகம்தான் என்றாலும் அதற்கான மாற்று நடவடிக்கைகள் அதைவிடச் செலவுமிக்கவை,” என்றார் மேற்கு பசிபிக் மருந்தியல் மன்றத்தின் தலைவர் ஜான் ஜாக்சன்.
வாழ்நாள் முழுமைக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கென வளங்களை ஒதுக்குதல், தடுப்பூசி முனைய வசதிகளை மேம்படுத்தல், தடுப்பூசிச் செயல்திறன், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தல் உள்ளிட்ட பல பரிந்துரைகளை அந்த ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது.