மரினா பே சேண்ட்ஸ் கடைத்தொகுதிக்கு வெளியே அக்டோபர் 3ஆம் தேதி நடைபாதையில் டாக்சியை ஓட்டிச் சென்றவருக்கு டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தன்னிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய போலிஸ், விசாரணை நடைபெறுவதாகக் கூறியது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பாதசாரிகளுக்கு அருகே நடைபாதையில் அந்த டாக்சி மெதுவாகச் செல்வதை அக்காணொளி காட்டியது. அங்கிருந்த பலரது கவனமும் அந்த டாக்சியின் பக்கம் திரும்பியது.
இதன் தொடர்பில் ஸ்டோம்ப் இணையத்தளத்திடம் பேசிய கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான திருமதி டேமி டான், இந்த விவகாரத்தை தாங்கள் விசாரித்ததாகச் சொன்னார்.
“டாக்சி ஓட்டும் பணிக்கு அந்த ஓட்டுநர் புதியவர். பயணி ஒருவரை இறக்கிவிட்ட பின்னர், அந்த இடம் அவருக்கு பரிச்சயம் இல்லாததால் நடைபாதையில் தவறுதலாக டாக்சியை ஓட்டிச் சென்றார்,” என்றார் திருமதி டான்.
“டாக்சியைத் திருப்ப முடியாது என்பதை உணர்ந்த அவர், சாலைக்கு இட்டுச்செல்லும் பாதையை நோக்கி டாக்சியை மெதுவாக ஓட்டிச் சென்றார். அங்கிருந்த பாதுகாவல் அதிகாரியிடம் அவர் உதவி நாடி சாலையைச் சென்றடைந்தார்.
“நல்ல வேளையாக இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. சம்பந்தப்பட்ட டாக்சி ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்,” என்று திருமதி டான் விவரித்தார்.