பொதுப் பேருந்து ஒன்றில் மாடிப்பகுதியில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், முகக்கவசத்தைச் சரியாக அணியாமல் இருந்தார். அதை ஓட்டுநர் தனது இருக்கையில் இருந்தவாறு கண்காணிப்புக் கேமரா மூலம் கவனித்தார்.
உடனே பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்தின் மாடிப்பகுதிக்குச் சென்ற ஓட்டுநர், முகக்கவசத்தை ஒழுங்காக அணியும்படி அந்த ஆடவரிடம் வலியுறுத்திவிட்டு தனது இருக்கையில் வந்து உட்கார்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முகமது ரீஸால் அப்துல்லா, 49, என்ற அந்தப் பயணி, ஓட்டுநரைப் பின்தொடர்ந்து வந்து, ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்புறம் நின்றுகொண்டு, சீனக் கிளைமொழியான ஹொக்கியன் மொழியில் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.
பொதுச்சேவை ஊழியரிடம் தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த ஆடவர்மீது அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இன்று (நவம்பர் 9) விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், முகமது ரீஸால் அப்துல்லாவுக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு எஸ்பிஎஸ் பேருந்துச் சேவை 10ஆம் எண் பேருந்தில் நடந்தது.