சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மூன்று தங்குவிடுதிகளைச் சேர்ந்த சுமார் 100 ஊழியர்கள் இன்று மதியம் வாழையிலை விருந்தை உண்டு சுவைத்தனர். சிலேத்தார் ஃபாஸ்ட், பிபிடி லாட்ஜ் 1பி, ஏவரி லாட்ஜ் ஆகிய தங்குவிடுதிகளைச் சேர்ந்த அந்த ஊழியர்கள் காலை சுமார் 11 மணியிலிருந்து ஆலயத்திற்கு வரத் தொடங்கி, ஆலய தரிசனம் செய்துவிட்டு குழுக்களாக அங்குள்ள பலபயன் மண்டபத்தில் சாப்பிட்டனர்.
பாதுகாப்பு இடைவெளியுடன் தனித்தனி மேசைகளில் ஊழியர்களுக்கு ஆலயத் தொண்டூழியர்கள் இலையில் சோறுடன் சாம்பார், கீரை, கிழங்குபொறியல், அப்பளம் ஆகியவற்றை பரிமாறினர். உணவு உண்ட பிறகு ஊழியர்கள் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொவிட்-19 காரணமாக 2020ஆம் ஆண்டு முதல் தங்குவிடுதியிலேயே அடைப்பட்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் கடந்தாண்டு பிற்பகுதியில் கட்டுப்பாடுகளுடன் வெளியேற அனுமதி பெற்றனர். இருந்தபோதும் இவர்களால் இன்னமும் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது. செயலி ஒன்றில் முன்பதிவு செய்துகொண்டுதான் வெளியேற முடியும்.
“சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் இவர்களுக்கு புத்தாண்டு உணர்வைத் தந்து அவர்களை மகிழ்விப்பது எங்களது கடமையாகக் கருதி செய்தோம்,” என்று இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ‘18 படிகள்’ என்ற சமூகச் சேவைக் குழுவின் தலைவர் தேவராஜ் நம்பிராஜன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கட்டுமான ஊழியர் கணேசன் பாலபிரியன், 39, வாழையில் விருந்து, பாயாசம், அப்பளம் எனச் சாப்பிட்டது ஒரு திருமண விருந்தில் கலந்துகொண்ட மகிழ்ச்சியைத் தந்ததாக குறிப்பிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் வாழையிலையில் உணவு சாப்பிட்டதாகக் கூறினார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர் என். மணிகண்டன். “வயிராற சாப்பிட்டு மகிழ்ந்தேன்,” என்றார் அவர்.