டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியின் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 5 முதல் 8ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 60 வாடிக்கையாளர்கள் $60,000 இழந்ததாகக் காவல் துறைக்குப் புகார் கிடைத்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு டிபிஎஸ் வங்கியிலிருந்து அனுப்பப்பட்டது போல் குறுந்தகவல்கள் கிடைத்தன. சந்தேக நடவடிக்கையால் அவர்களுடைய வங்கி கணக்கு அல்லது கடன்பற்று அட்டை முடக்கப்பட்டிருப்பதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
குறுந்தகவலில் அளிக்கப்பட்ட இணையப்பக்கத்துக்குச் சென்று, அதில் தங்கள் வங்கிக் கணக்கு தகவல்களையும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.
இதன் மூலம், மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருட முடிந்தது.
தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் அகப்பட்டனர். அவர்கள் 17 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 7 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். காவல் துறை அவர்களை விசாரித்து வருகிறது.