சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிக்கு மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இலக்காகியுள்ளார்.
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி எம்.பி. சக்தியாண்டி சுபாட், தமது படம், பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டகிராமில் பல்வேறு போலிக் கணக்குகள் உருவெடுத்து இருப்பது பற்றி பயனாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரியப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “உங்களை அவர்கள் தொடர்புகொண்டால் அவர்களுக்குப் பதில் அளிக்காதீர்கள். எனது உண்மையான கணக்கு @saktiandisupaat ஆகும்,” என்றார்.
திரு சக்தியாண்டியைக் குறைந்தது மூன்று இன்ஸ்டகிராம் கணக்குகளும் ஒரு ஃபேஸ்புக் கணக்கும் ஆள்மாறாட்டம் செய்வதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது. அவற்றில் இரு கணக்குகள் செப்டம்பரில் தொடங்கப்பட்டன.
இந்தப் போலிக் கணக்குகள் குறித்து இஸ்டகிராமில் தம் நண்பர்களும் பயனாளர்களும் சனிக்கிழமையில் இருந்து தமக்குத் தகவல் அளித்து வந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திரு சக்தியாண்டி கூறினார்.
தம்மைத் தொடர்புகொண்டவர்களில் எவரும் மோசடியால் ஏமாறவில்லை என்பதால், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றார் தோ பாயோ ஈஸ்ட் தொகுதி எம்.பி.யான திரு சக்தியாண்டி.
ஆள்மாறாட்டக்காரர்களிடம் இருந்து சமூக வலைத்தளக் கணக்குகளைப் பாதுகாத்துக்கொள்ள வேறென்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறீர்கள் என திரு சக்தியாண்டியிடம் கேட்கப்பட்டது. தமது உண்மையான கணக்குகளில் பெரும்பாலானவை மெட்டா நிறுவனத்தின் நீல நிறக் குறியை ஏற்கெனவே பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், கல்வி அமைச்சர் சான் சுன் சிங், மெக்பர்சன் எம்.பி. டின் பெய் லிங் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களின் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்கப்பட்டன.