சிங்கப்பூரில் 1945 ஆம் ஆண்டு முதல் அண்மைய காலகட்டத்தில் எழுதப்பட்ட நவீன இலக்கியங்கள் வரை, பல எழுத்தாளர்கள் படைத்த கதாபாத்திரங்களின் மாறுபடும் குணாதிசயங்களையும் சூழ்நிலைகளையும் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நவம்பர் 25ஆம் நாள் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸில்’ நடைபெற்றது.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2023ன் ஒரு பகுதியாக நடைபெற்ற அந்த ‘கறுப்பும் வெள்ளையும் கலந்த கதை மாந்தர்கள்’ நிகழ்வில், சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கே பாலமுருகன், வித்யா அருண், முஹம்மது ரியாஸ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இதனை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மகேஷ் குமார் தொகுத்து வழங்கினார்.
மிகை உணர்ச்சிவாதம் கொண்ட லட்சியவாதக் கதாநாயகன், மீட்பான், ஒழுக்கியல் நாயகன், காவியத் தலைவன், புரட்சியாளன் போன்ற கதாபாத்திரங்களுடன் விளிம்புநிலை மனிதர்கள், தோல்வியுற்றவர்கள், குற்றவாளிகள் உள்ளிட்ட யதார்த்த கதாபாத்திரங்களையும் அதன் வடிவமைப்புகளையும் குறித்துப் பேசினர் எழுத்தாளர்கள்.
முஹம்மது ரியாஸ், ஓர் உறவின் பல பரிமாணங்கள், சட்டம், சாதி, பொருளாதாரம், அதிகாரம், ஆண்-பெண் சமத்துவம் என பல சமூகக் கருத்துகள் பேசும் கதைகளையும் அதன் கதை மாந்தர்கள் குறித்தும் பகிர்ந்தார்.
அவர், யாராலும் பேசப்படாத, அறியப்படாத, கவனிக்கப்படாத மனிதர்களின் கதையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் ஒரு படைப்பாளனின் கடமை என்றார்.
தொடர்ந்து அவை பேசப்படும் பொழுது, சமூகத்தில் வாழும் மற்ற மனிதர்களின் மீதான அக்கறை இருக்க வேண்டும் என்கிற உணர்வு, வாசிப்பாளர்களிடம் போய்ச் சேரும் என நம்புவதாகவும் திரு ரியாஸ் சொன்னார்.
எழுத்தாளர் வித்யா அருண், சமூகத்தில் நாம் அன்றாடம் காணும் மனிதர்களை கதாபாத்திரமாக்கி எழுதப்பட்ட நவீன இலக்கியங்களையும் அவை பேசும் நவீன சிரமங்கள் குறித்தும் சுவைபட விளக்கினார்.
மேலும் அவர், இணையத்தில் மூழ்கியுள்ள இளையர்களை வாசிப்புப் பழக்கம் நோக்கிச் செலுத்த சிங்கப்பூரில் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் கே பாலமுருகன், தமது புத்தகங்களிலும், சா. அன்பானந்தம், எம். குமரன், ஐ. இலவசகு, எ ரெங்கசாமி, வண்ணநிலவன், சீ. முத்துசாமி உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளிலும் வரும் கதை மாந்தர்களின் இயல்பு குறித்து உரையாற்றினார்.
மலேசிய மக்கள் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்த சிரமங்கள் குறித்து படைக்கப்பட்ட இலக்கியங்களையும் அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று குறிப்பிட்ட அவர், இளையர் சந்திக்கும் நவீன பிரச்சினைகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டால், அவர்கள் அதை படிக்க ஆர்வம் கொள்வார்கள் என தெரிவித்தார்.
மேலும் அவர், புதிதாக வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபட நினைக்கும் இளையர்கள், எழுத்தாளர் புதுமைப்பித்தனின் படைப்புகளில் தொடங்கி, வண்ணதாசன், வண்ணநிலவன் வாயிலாக வாசிப்பின் ருசியை அறியலாம் எனப் பரிந்துரைத்தார்.