கார்த்திக் தேவராஜ் தனது 13வது வயதில் காற்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்குப் பதிலாக ‘யோ-யோ’ விளையாட்டின் மீது நாட்டம் கொண்டார்.
அன்று வெறும் பொழுதுபோக்காகத் தொடங்கியது பின்னாளில் அவருக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.
“என் நெருங்கிய நண்பர் எனக்கு ‘யோ-யோ’ விளையாட்டை முதலில் அறிமுகப்படுத்தினார். தினமும் நான் பள்ளி முடிந்து கிட்டத்தட்ட 5 மணி நேரம் தொடர்ந்து ‘யோ-யோ’ விளையாடிப் பழகினேன்,” என்றார் கார்த்திக்.
சில மாதங்களில், தனது முதல் ‘யோ-யோ’ போட்டிக்காக சிங்கப்பூரில் மேடையேறினார்.
“ஜப்பான், தாய்லாந்து, கொரியா போன்ற பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். வெற்றி பெறவில்லை என்றாலும், அவர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாத தருணங்கள்,” என்றார்.
முதல்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ‘யோ-யோ’ விளையாடிய கார்த்திக், உற்சாகமடைந்தார். சிங்கப்பூரில் ஒரு ‘யோ-யோ’ வெற்றியாளராக முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். மேலும், சிறு போட்டிகள் எல்லாவற்றிலும் மனந்தளராமல் கலந்துகொண்டார்.
“நடனத்துக்கும் பாடலுக்கும் எப்படி ஓர் அமைப்பு இருக்கிறதோ, ‘யோ-யோ’ விளையாட்டுக்கும் ஒரு தனித்துவமான அசைவு அமைப்பு தேவை. அதன் மூலம் ஒரு ‘யோ-யோ’ கலைஞர் தனது செயல்திறனால் மக்களை கவரலாம்,” என்றார் அவர்.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் ‘யோ-யோ’ போட்டியில் பல ஆசிய நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்பாராத விதமாக முதல் இடத்தைப் பிடித்து வெற்றிவாகை சூடினார் கார்த்திக். தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற தேசிய ‘யோ-யோ’ வெற்றியாளர் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.
“கொவிட்-19 தொற்று காரணமாக ‘யோ-யோ’ போட்டிகளும் பயிற்சிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டன. இதனால் நானும் ‘யோ-யோ’ விளையாடுவதை அதிக ஆர்வத்துடன் மேற்கொள்ளவில்லை,” என்றார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறுதியுடன் களம் இறங்கினார் கார்த்திக். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜூலை 2023ல் மீண்டும் சிங்கப்பூர் தேசிய ‘யோ-யோ’ வெற்றியாளர் போட்டியில் பங்குபெற்றார். ஆனால், இம்முறை ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
“என் ‘யோ-யோ’ ஆற்றலை எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். புதிய உத்திகளைக் கற்றுக்கொண்டேன்,” என்றார்.
தற்போது 23 வயதாகும் கார்த்திக், பல தேசிய மேடைகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து ஒரு ‘யோ-யோ’ வெற்றியாளராகத் திகழ்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசியாவிலும் தாய்லாந்திலும் இடம்பெற்ற ஆசிய ‘யோ-யோ’ போட்டிகளில் முதலிடம் பிடித்தார்.
தற்போது கார்த்திக், கிடைக்கும் நேரங்களில் சிறு குழந்தைகளுக்கு ‘யோ-யோ’ பயிலரங்குகள் நடத்தி வருகிறார்.
“அங்கீகாரம் கிடைப்பதில் கவனம் செலுத்தாமல், விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும் என்று இக்கால இளையர்கள் யோசிக்க வேண்டும். ‘யோ-யோ’ என் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு கலை,” என்றார்.
ஆர்வமும் விடாமுயற்சியும் ஒவ்வொரு கை அசைவிலும் இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்று உறுதிபடக் கூறுகிறார் இந்த இளையர்.