பூன் லே டிரைவில் கடந்த புதன்கிழமை ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு ஆடவர்கள் மீது இன்று சனிக்கிழமை காலை (ஏப்ரல் 9) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சிங்கப்பூரர்களான முகம்மது சஜித் சலீம், 20, நிஸ்வன் திருச்செல்வம், 19, ஆகிய அவ்விருவரும் காணொளி இணைப்பு மூலம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
புளோக் 175 பூன் லே டிரைவில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் திரு பிரவீன் ராஜ் சந்திரன் என்பவரை ரொட்டி வெட்டும் கத்திகளைக் கொண்டு தாக்கி கடுமையான காயம் விளைவித்ததாக அவ்விரு ஆடவர்களுக்கும் தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களில் திரு பிரவீனின் வயது குறிப்படப்படவில்லை. ஆனால், காவல்துறை முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில், சஜித்தும் நிஸ்வனும் 22, 23 வயதுடைய இரு ஆடவர்களைத் தாக்கியதாகக் கூறப்பட்டிருந்தது. மற்றோர் ஆடவரைத் தாக்கியதன் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம். இந்த வழக்கில் வாதாட அவர்கள் பிரதிநிதிக்கப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அவ்விருவரும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
இந்நிலையில், தாக்குதலில் திரு பிரவீனுக்கு தலையிலும் கை, கால்களிலும் 12 வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குப் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
தாக்குதலுக்கு ஆளான மற்றொருவரான திரு சரண் குமாருக்கு தலையில் 8 சென்டிமீட்டர் அளவு ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை காலை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.