ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏழாவது சுற்று முடிவில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இவ்விருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 33,672ஆக உள்ளது.
இவர்களுக்கு அடுத்தபடியாக, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 2,964 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வெறும் 431 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார்.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை (மார்ச் 2) இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார்.