மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன

மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன

2 mins read
4fd003b8-d37d-4ec0-b077-6a0650fe351e
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அடுத்த திங்கட்கிழமையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

ஆனால், கோலாலம்பூர், சாபா மாநிலம், சிலாங்கூரின் 9 மாவட்டங்களில் 6 மாவட்டங்கள் ஆகிய இடங்களில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (CMCO) எனப்படும் பகுதி முடக்க நிலை இம்மாதம் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

நெகிரி செம்பிலான், ஜோகூர் மாநிலங்களின் சில பகுதிகளிலும் CMCO நடப்பில் இருக்கும் என்றார் அவர்.

வரும் திங்கட்கிழமை முதல் மாநிலங்களுக்கிடையிலான பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

டாப் குளோவ் தொழிற்சாலைகள், அதன் ஊழியர்கள் தங்குமிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) எனும் முழு முடக்கநிலை நடப்பில் இருக்கும்.

அந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருப்போருக்கு சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

"CMCO நீட்டிக்கப்பட்டால், நள் ஒன்றுக்கு 300 மில்லியன் ரிங்கிட் (S$98.6 மி.) வரை இழப்பு ஏற்படும், வேலையிழப்புகளும் அதிகரிக்கும். மக்களையும் பொருளியலையும் கவனமாகப் பராமரிக்க வேண்டும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இன்று 1,123 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,359 ஆகியுள்ளது.

புதிதாக 4 மரணங்கள் பதிவானதையொட்டி, அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 380 ஆகியுள்ளது.

இதற்கிடையே, பினாங்கின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 6,238 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்து முடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பினாங்கில் பணிபுரியும் சுமார் 127,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்