திட்டமிட்டபடி சிங்கப்பூரின் பாதுகாப்பான சோதனை சொகுசுக் கப்பல் பயணங்கள் தொடரும் என்று தெரிவித்த சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளுக்குக் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான உடனடி பதில் நடவடிக்கைகள் விரைவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.
‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் ‘குவான்டம் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பலில் இருந்த முதிய பயணி ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவர் உடனடி யாகக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டார்.
நான்கு நாள் பயணம் மேற்கொள்ளவிருந்த அந்தக் கப்பல் மூன்றாம் நாளில் சிங்கப்பூர் திரும்ப உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்பில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று கருத்துரைத்தது.
இதற்கிடையே, சிங்கப்பூர் திரும்பியவுடன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து மூன்று கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த 83 வயது முதியவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப் பட்டது என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கப்பலில் ஏற்பட்ட தொற்று சம்பவம் குறித்து நேற்று வெளியிட்ட பயணத்துறைக் கழகத்தின் அறிக்கையில், “பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நேற்றைய சம்பவம், எதிர்கால கப்பல் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ள படிப்பினையைத் தந்துள்ளது. ட்ரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவியின் பயன்பாட்டால், பயணிகளின் தடமறிதலை எளிதில் மேற்கொள்ள முடிந்தது அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளது.
“இதுபோன்று எதிர்காலத்தில் மற்றொரு கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவம் கப்பலில் நிகழ்ந்தால், பதில் நடவடிக்கை விரைவாகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் வழங்கியுள்ளது.
“குறிப்பாக, ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல்’ கப்பல் நிறுவனத்துக்கும் முனையத்தின் நடத்துநரான சேட்ஸ்-குருவர்ஸ் நிறுவனத்தின் துரிதமான அவசரகால நடவடிக்கைக்கும் எங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் சிங்கப்பூர் பயணத் துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி திரு கீத் டான்.
அத்துடன் நேற்று முன்தினம் ‘குவான்டம் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பலின் பயணிகள் கப்பலிலிருந்து இறங்குவதற்கு வழிவிடும் வகையில் ஜென்டிங் குருஸ் லைன்ஸ் கப்பல் நிறுவனம் தனது கப்பலின் பயணிகளை அதற்கு முன்பாக விரைவில் இறங்க வைத்து உதவியதற்கும் திரு டான் நன்றி தெரிவித்தார்.
இதன் மூலம் இரு கப்பல்களின் பயணிகள் முனையத்தில் ஒருவரோடு ஒருவர் சந்தித்துக்கொள்வது தவிர்க்கப்பட்டது. ‘குவான்டம் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பலில் பயணம் செய்த 1,600க்கு மேற்பட்ட பயணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்கில் கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
“அந்தக் கப்பல்களின் நிபுணத்துவ செயல்பாடு, நமது சோதனை சொகுசுக் கப்பல் பயணங்கள் தொடர்ந்து பாதுகாப்புடன் நடைபெறுவதற்கான நம்பிக்கையை நமக்கு அளித்துள்ளது,” என்றும் திரு டான் சொன்னார்.
சுகாதார அமைச்சு தனது அறிக்கையில், ‘குவான்டம் ஆஃப் த சீஸ்’ கொசுகுக் கப்பலில் உள்ள சோதனை முறையின் மறுபரிசீலனைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
முதியவருக்கு கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப் பட்டதால், தனது பயணங்களைத் தொடரக்கூடிய செய்தியை வரவேற்ப தாகக் கூறிய ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல்’ நிறுவனம் அந்த முதியவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.