சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் தவிர்த்து, இந்தோனீசியாவில் இருந்து வரும் மற்ற பயணிகளுக்கான நுழைவு அனுமதி உடனடியாகக் குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனீசியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, சிங்கப்பூரின் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
கூடுதல் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நுழைவு அனுமதி பரிசீலிக்கப்படலாம் என்று அமைச்சு கூறியிருக்கிறது.
கடந்த 21 நாள்களுக்குள் இந்தோனீசியாவிற்குச் சென்றவர்கள் எவரும் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தக் கட்டுப்பாடு நாளை மறுநாள் இரவு 11.59 மணியில் இருந்து நடப்பிற்கு வரும்.
அத்துடன், இந்தோனீசியாவில் இருந்து வருவோரும் சிங்கப்பூருக்குப் புறப்படுமுன் 48 மணி நேரத்திற்குள் ‘பிசிஆர்’ பரிசோதனை செய்துகொண்டு, ‘தொற்று இல்லை’ என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
அவ்வாறு ‘தொற்று இல்லை’ என்பதற்கான ‘பிசிஆர்’ பரிசோதனைச் சான்றிதழை வழங்கத் தவறுவோர்க்குச் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.
(இந்தச் செய்தியின் விரிவாக்கம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)