உள்ளூரில் இன்று (ஆகஸ்ட் 3) புதிதாக 98 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூரில் 100க்கும் குறைவானோருக்கு ஒருநாள் தொற்று உறுதியாகியிருப்பது ஜூலை 18ஆம் தேதிக்குப் பிறகு இதுவே முதன்முறை.
உள்ளூரில் புதிதாக தொற்று கண்டவர்களில் 46 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடைய மற்ற 21 பேருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சிய 31 பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் ஏழுப் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர். அவர்களுக்குக் கடுமையான நோய்ப் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த நான்கு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வந்திறங்கியபோது அவர்களில் மூவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இங்கு வந்த பிறகு தங்குமிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது எஞ்சிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 65,311ஆக உள்ளது.