உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள நார்த் கோஸ்ட் லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 62 பேரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று மனிதவள அமைச்சு இன்று (ஆகஸ்ட் 23) தெரிவித்துள்ளது.
வழக்கமாக நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனை மூலம் மூன்று பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது முதலில் தெரியவந்தது. அதே சமயத்தில் விடுதியில் கழிவுநீரைச் சோதித்துப் பார்த்தபோதும் அங்கு தங்குபவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்ததாக அமைச்சு கூறியது.
அதையடுத்து அங்கு தங்குபவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் மேலும் 59 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் சிலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று அமைச்சு கூறியது.
எஞ்சியிருப்பவர்களுக்கு இலேசான சுவாசத் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததாக அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்டோர் அனைவரும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
அந்த 62 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்த கட்டுமானத் தளங்களில் கட்டட, கட்டுமான ஆணையம் வேலை நிறுத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நார்த் கோஸ்ட் விடுதியில் தங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த சில வாரங்களுக்கு அடிக்கடி கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.
கிருமிப் பரவலைத் தடுக்க விடுதியில் உள்ள அனைவருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊழியர்கள் தங்கள் அறையிலேயே 14 நாட்களுக்கு இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது, அறையில் இருக்கும்போது அவர்கள் சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விடுதியில் தங்கும் ஊழியர்களுக்கு எவ்வாறு கிருமித்தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.