ஒன்றரை ஆண்டு காலத்துக்குப் பிறகு புதன்கிழமை (செப்டம்பர் 15) லிட்டில் இந்தியாவில் கால் வைத்த கட்டுமானத்துறை ஊழியரான 28 வயது திரு வீரசாமி முருகனுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் பெருகியது.
கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்தாண்டு ஏப்ரல் முதல் தங்குவிடுதியிலேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டுப்பாடு. வெளியிடத்துக்குச் செல்ல நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைத்த அனுமதியால் மிகுந்த உற்காசத்துடன் அவர் லிட்டில் இந்தியாவைச் சுற்றினார்.
கொவிட்-19 பரவலுக்கு முன்னதாக வாரயிறுதி நாள்களில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டு, கடைகளுக்குச் செல்வார். அப்போது அப்பயணங்கள் வழக்கமானதாக இருந்ததால் அது அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
"பல மாதங்கள் கழித்து மீண்டும் லிட்டில் இந்தியாவுக்கு வருவது ஊருக்கு வந்தது போலிருக்கிறது," என்றார் கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கே பணிபுரியும் திரு முருகன்.
முழுக்கை சட்டை அணிந்து, புத்துணர்ச்சியுடன் காணப்பட்ட திரு முருகன், விரைவில் கிருமிப் பரவல் கட்டுக்குள் வந்து ஊருக்குச் சென்று பெற்றோரைக் காணமுடியும் என்று இந்தக் கட்டுப்பாடுத் தளர்வு நம்பிக்கை அளிப்பதாகக் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களைப் படிப்படியாக சமூகத்திற்குள் ஒருங்கிணைக்கும் முன்னோடித் திட்டத்தின்கீழ், லிட்டில் இந்தியாவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட வெவ்வேறு தங்குவிடுதிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 100 ஊழியர்களில், தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு முருகனும் ஒருவர்.
முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள இந்த ஊழியர்களில் சிலர், காலையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்திற்குச் சென்றனர்.
இந்த முன்னோடித் திட்டத்தின்கீழ் வாரத்திற்கு 500 ஊழியர்கள் வரை லிட்டில் இந்தியாவிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இத்திட்டத்திற்கு எந்த விடுதிகள் தகுதிபெறுகின்றன என்பதை மனிதவள அமைச்சு ஆராயும் என்று அமைச்சின் உத்தரவாத, பராமரிப்பு, ஈடுபடுத்தல் (ACE) குழுவின் தலைவர் டங் யுய் ஃபாய் தெரிவித்தார்.
இன்று லிட்டில் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட முதல் ஊழியர் குழு, வெஸ்ட்லைட் மண்டாய் விடுதியைச் சேர்ந்தவர்கள். அங்கு முன்னதாக 14 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள தொற்றுக் குழுமம் இம்மாதம் மூடப்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப பிற விடுதிகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும் என திரு டங் கூறினார்.
தேக்கா லேனிலும் ரேஸ் கோர்ஸ் லேனிலும் பயணிகள் ஏறி இறங்கும் இரண்டு இடங்கள் இருக்கும். தங்குவிடுதியிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாகவும் மூன்று நாள்களுக்குப் பிறகும் ஊழியர்கள் ‘ஏஆர்டி’ விரைவுப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இவர்களுக்கான போக்குவரத்துச் செலவை மனிதவள அமைச்சு ஏற்கும் என்று திரு டங் தெரிவித்தார்.
அப்பர் புக்கிட் தீமா சாலை, ஜாலான் புசார் சாலை, கிச்சனர் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய நான்கு சாலைகளுக்குள்ளான பகுதிக்குள் அவர்கள் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் கொவிட்-19 கிருமிப்பரவல் வெளிநாட்டு ஊழியர்களிடையே மிக வேகமாக பரவியது முதல் விடுதி ஊழியர்கள், வேலையிடத்தைத் தவிர சமூகத்திற்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
வெகுநாள் விடுதிகளில் அடைபட்டிருந்த ஊழியர்கள் பலரும் வெளியில் வர முடிந்தில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். வெளியே செல்ல முடியாத வருத்தம் இருந்தாலும் கட்டுப்பாடுகள் நன்மைக்கே என உணர்வதாகக் கூறினார் சிங்கப்பூரில் கடந்த 14 ஆண்டுகளாகப் பணியாற்றும் பக்கிரிசாமி முருகானந்தம், 36. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கட்டுமானத்துறையில் பணிபுரிகிறார்.
"வாழையிலையில் உணவு சாப்பிட போகிறேன். முஸ்தபாவுக்குப் போகப் போகிறேன். அடுத்த பயணத்தின்போது ஜூரோங் ஈஸ்ட்டிக்குப் போக விரும்புகிறேன்,” என்றார் திரு மகாலிங்கம் ராஜாஜி, 28. ஒன்றரை ஆண்டு கழித்து வெளியே வந்த களிப்புடன் இருந்த இவர், ஏழு ஆண்டுகளாக இங்கே கட்டுமான ஊழியராகப் பணிபுரிகிறார்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் தொடக்கக் காலகட்டத்திலிருந்து அக்கோவிலுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஆலயத்தின் பொருளாளர் திரு பாஸ்கரன் அம்பிகாபதி, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் மீண்டும் ஆலயத்திற்குள் வருவதைக் காணும்போது அகமகிழ்வதாகத் தெரிவித்தார்.