கொவிட்-19 தொற்றால் 68க்கும் 91 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் அறுவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) இரவு தெரிவித்தது.
அவர்களில் ஆடவர்கள் ஐவரும் மாது ஒருவரும் அடங்குவர். அவர்களில் நால்வர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
அந்த அறுவரில் ஐவருக்கு பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவருக்கு மருத்துவப் பிரச்சினை இருந்ததாகத் தெரியவில்லை.
சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது நாளாக கொவிட்-19 தொற்றால் மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 113ஆக உள்ளது.
அக்டோபர் முதல் மூன்று நாள்களில் மட்டும் 18 மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மாதம் 40 பேரும் ஆகஸ்ட்டில் 18 பேரும் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிதாக 2,057 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. சமூக அளவில் 1,676 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 373 பேரும் பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் எட்டுப் பேருக்கும் தொற்று உறுதியானது.
செப்டம்பர் 18ஆம் தேதியிலிருந்து அன்றாடப் பாதிப்பு தொடர்ந்து 1,000க்குமேல் பதிவாகி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து (செப்டம்பர் 28) அன்றாடப் பாதிப்பு 2,000க்குமேல் பதிவாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் 1,337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 1,422ஆக இருந்தது.
அவர்களில் 250 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.