பிரிட்டனில் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான புதிய ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) நிலவரப்படி கிட்டத்தட்ட 25,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு அதை சனிக்கிழமை (டிசம்பர் 18) அன்று தெரிவித்தது.
உண்மையான தொற்று எண்ணிக்கை இதைவிட வெகு அதிகமாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் மருத்துவ ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஏதும் எடுக்காவிட்டால், பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் நாளுக்கு 3,000 பேர் அனுமதிக்கப்படலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த வாரத்தில், கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.
இந்நிலையில் லண்டன் மேயர் சாதிக் கான், நகரில் 'முக்கிய சம்பவம்' எனும் நிலையை அறிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து இரண்டாவது நாளாக பிரிட்டனில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 90,000க்கும் அதிகமாக இருந்தது.
சனிக்கிழமை அன்று 90,418 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அங்கு 93,045 கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.
அத்துடன் 24 மணி நேரத்தில் 125 பேர் மாண்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.