தைப்பூசத்திருவிழா, கடந்தாண்டைப் போல இந்த ஆண்டும் கிருமிப்பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அமைதியாக நடந்து வருகிறது. டேங்க் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்கு நேற்று நள்ளிரவு முதல் வரத் தொடங்கிய பக்தர்கள் பால் குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடன்களை முருகனுக்குச் செலுத்தினர்.
இன்று காலை எட்டு மணி அளவில் கோயிலுக்குச் சிறப்பு வருகை அளித்த துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் பால்குடம் சுமந்து சென்றார். பிறகு ஆலயத் தொண்டூழியர்களிடமும் பொதுமக்களிடமும் பேசினார்.
பால்குடம் செலுத்த 7,500 பக்தர்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டதாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் தலைவர் சேக்கப்பன் சுவாமிநாதன்,68, தெரிவித்தார். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 5,000 ஆக இருந்தது. “இன்று பால் குடம் செலுத்தும் பக்தர்களைத் தவிர்த்து மேலும் 7,500 பக்தர்கள் கோயிலுக்கு வருவர் என எதிர்பார்க்கிறோம். அன்னதானத்திற்காக மொத்தம் 16,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுன்றன, ” என்றார் திரு சுவாமி நாதன்.