அமெரிக்காவில் கொவிட்-19 பெருந்தொற்று விரும்பத்தகாத மைல்கல்லை எட்டியுள்ளது. கொவிட்-19க்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900,000ஐ கடந்துவிட்டது.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் 100,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரித்ததே அதற்குக் காரணம்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், “இன்று (வெள்ளிக்கிழமை) துயர் நிறைந்த மற்றொரு மைல்கல்லை நாம் குறிக்கிறோம். கொவிட்-19க்கு இதுவரை 900,000 அமெரிக்கர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற அன்புக்குரியவர்களுக்காக நாம் பிரார்த்திக்கிறோம். இந்த வலியைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்தை நாம் நினைத்துப் பார்க்கிறோம்,” என்றார்.
டெல்டா திரிபைவிட ஓமிக்ரான் வேகமாகப் பரவக்கூடியதாக இருந்தாலும், பொதுவாக அது கடுமையான நோய்ப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று முதற்கட்ட ஆதாரம் காட்டியுள்ளது.
என்றாலும், அமெரிக்காவில் அதிகமானோரை ஓமிக்ரான் தொற்றியதால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் சுகாதாரப் பராமரிப்பு முறை அண்மைய வாரங்களாக திக்குமுக்காடி வருகிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஓமிக்ரான் நோயாளிகளில் பெரும்பகுதியினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அல்லது நாட்பட்ட மருத்துவப் பிரச்சினைகள் உடையோர் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அமெரிக்கர்களிடம் அதிபர் பைடன் மீண்டும் வலியுறுத்தினார்.
மற்ற நாடுகளைவிட அமெரிக்காவை ஓமிக்ரான் அதிகம் பாதித்திருக்கக்கூடும் என்று தரவுகள் கூறுகின்றன.