கொவிட்-19 கிருமிப்பரவலில் இந்திய அரசாங்கம் கூறியதைவிட பன்மடங்கு அதிகமான இந்திய குடிமக்கள் மாண்டனர் என்று கூறவுள்ள உலக சுகாதார அமைப்பின் அறிக்கை இந்தியாவால் பல மாதங்களாக தாமதமாகி வருகிறது.
கடந்த 2021 இறுதிக்குள் கிருமித்தொற்றால் இந்திய குடிமக்களில் குறைந்தது 4 மில்லியன் பேர் பெருந்தொற்றில் மாண்டனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவே உலக நாடுகளில் ஆக அதிக எண்ணிக்கை என்றும் அறிக்கை முன்வைக்கவுள்ளது.
ஆனால் அந்த மரண எண்ணிக்கை தவறு என்று கூறும் இந்தியா அறிக்கைக்கு ஆட்சேபித்து வருகிறது.
அதனால் அந்த அறிக்கை வெளியாவதை இந்தியா தடுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் கூறியுள்ளது.
கொவிட்-19 பரவலால் 6 மில்லியன் பேர் மாண்டனர் என்று உலக நாடுகள் தாங்களே ஒப்படைத்த தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் உலகம் எங்கும் சுமார் 15 மில்லியன் பேர் மாண்டதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை மதிப்பிடுகிறது.
கொவிட்-19 தொற்றைத் தவிர, கிருமிப்பரவலால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழந்தவர்கள் போன்ற மறைமுக மரணங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, உலகின் கிட்டத்தட்ட 25 விழுக்காட்டு மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தன என்று அறிக்கை கூறவுள்ளது.
இந்திய அரசாங்கமோ கொவிட்-19 பெருந்தொற்றில் சுமார் 520,000 இந்தியர்கள் மாண்டனர் என்று அதிகாரபூர்வமாகக் கூறியுள்ளது.
அறிக்கையில் உள்ள மரண எண்ணிக்கை திரட்டப்பட்ட வழிமுறைகள் தவறு என்று கூறும் இந்தியா, அதை ஏற்க மறுத்துள்ளது.
இந்தியா மறுத்து வருவதால் ஜனவரியில் வெளியிடப்பட இருந்த அறிக்கை இப்போது ஏப்ரலுக்குத் தள்ளிப் போயுள்ளது.
ஆனால் அறிக்கை மேலும் தாமதமானால் தாங்களே அதை வெளியிடப்போவதாக தகவல் திரட்டில் பங்கெடுத்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொவிட்-19 கிருமிப்பரவலை உலகம் எவ்வாறு கையாண்டது என்பதையும் எதிர்காலப் பெருந்தொற்றுகளை எப்படி இன்னும் மேம்பட்டு கையாள முடியும் என்பதையும் புரிந்துகொள்ள அறிக்கை மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.