போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக புதன்கிழமை (ஏப்ரல் 27) காலை தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே ராமலிங்கத்தின் நல்லுடல் மலேசியாவின் ஈப்போவிற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அதற்கு முன்னர் அவரது நல்லுடல் நான்கு மணி நேரம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சின் மிங் டிரைவ் புளோக் 38ல் பிற்பகல் 1 மணி முதல் ஏறத்தாழ மாலை 5 மணி வரை 33 வயது நாகேந்திரனின் நல்லுடல் வைக்கப்பட்டது.
நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
பல இனம், பல சமயத்தைச் சேர்ந்தவர்களும் வருகைதந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அவரது தாயாரும் இதர உறவினர்களும் அங்கு காணப்படவில்லை.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் போதைப் பொருள் கடத்திவந்த குற்றம் நிரூபிக்கப்பட்டு நாகேந்திரனுக்கு 2010ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பல முறை மேல் முறையீடு செய்து தோல்வியடைந்த பட்சத்தில் இறுதியாக கடந்த திங்கட்கிழமை அவரது தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டு புதன் அன்று தூக்குத் தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது.
கடைசி முறையாக இரண்டு மணி நேரம் தமது குடும்பத்தினரோடு உரையாடவும் தாயாரின் கரத்தைப் பிடிக்கவும் செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்ற வளாகத்தில் நாகேந்திரனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.