சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி திறந்து விடப்பட்டதிலிருந்து, கடந்த வாரயிறுதியின்போதுதான் ஆக அதிகமானவர்கள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்தனர்.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் இதை புதன்கிழமை (ஜூன் 8) அன்று தெரிவித்தது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சுங்கச் சாவடிகளில் இந்த ஜூன் மாதம் முடியும்வரை பயணிகள் அதிகப் போக்குவரத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ஒவ்வொரு நாளும் சராசரியாக 262,000 பயணிகள் சோதனைச்சாவடிகளைக் கடந்தனர்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தினமும் பயணம் செய்பவர்கள் குடிநுழைவுச் சோதனைகளைக் கடந்துசெல்ல கூடுதல் நேரம் எடுக்கும் என்பதைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன், போக்குவரத்து நிலவரத்தைக் கவனத்துவிட்டு அவர்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை இந்த ஆண்டு மே 28ஆம் தேதி தொடங்கியது.
ஜூன் 27ஆம் தேதி பள்ளி மீண்டும் தொடங்கும்.