ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நாரா நகரில் சுடப்பட்ட இடத்துக்குச் சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை (ஜூலை 9) அன்று நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்கொத்து வைத்து அவர்கள் திரு அபேயின் படங்களை வணங்கினர்.
நாரா நகரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த திரு அபே சுடப்பட்டார்.
தாமே செய்த நாட்டுத் துப்பாக்கியால் திரு அபேயைச் சுட்டதாக டெட்சூயா யமாகாமி, 41, ஒப்புக்கொண்டுள்ளார்.
திரு அபே சிகிச்சை பலனின்றி மாலையில் இறந்தார்.
அவரது நல்லுடல் தாங்கிய ஆம்புலன்ஸ் சனிக்கிழமை (ஜூலை 9) காலை மருத்துவமனையிலிருந்து புறப்பட்டதாக என்எச்கே செய்தி நிறுவனம் கூறியது.
தேர்தல் பிரசாரம் தொடர்கிறது
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
ஆனால் திரு அபேக்கு மரியாதை செய்யும் வகையில் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.
இன்று கடைசி நாள் பிரசாரம். நாளைய வாக்கெடுப்பில் பிரதமர் கிஷிடாவின் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு அபே பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசியல் ஆசானாகக் கருதப்பட்டவர்.
அதனால் அவரது படுகொலையால் ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு பல அனுதாப வாக்குகளும் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பானில் பிரதமராக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் திரு அபே.
ஜப்பானிய பொருளயலையும் அரசியலையும் மாற்றிய முக்கிய அரசியல் தலைவராக அவர் கருதப்படுகிறார்.
திரு அபே மீது காழ்ப்புணர்ச்சி
திரு அபேயைச் சுட்டுக்கொன்ற யமாகாமி, குறிப்பிட்ட அமைப்பை வெறுத்தார் என்றும் திரு அபேக்கும் அந்த அமைப்புக்கும் தொடர்பு இருந்ததாக நினைத்தார் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அதனால்தான் யமாகாமி திரு அபேயைச் சுட்டார் என்றும் அவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
அந்த அமைப்பு சமய அமைப்பு என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக சுவுத் சைனா மோர்னிங் போஸ்ட் கூறியது.