அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, வியாழக்கிழமை அன்று சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், பெயர் குறிப்பிடாத இரண்டு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அதை புதன்கிழமை (ஆகஸ்ட் 10) அன்று தெரிவித்தது.
இலங்கை அரசாங்கம் இச்செய்தி குறித்து இதுவரை கருத்துரைக்கவில்லை.
மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பியோடிய திரு கோத்தபாய, முதலில் மாலத்தீவுக்குச் சென்றார். அங்கிருந்து புறப்பட்டு ஜுலை 14ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்தார்.
தனிப்பட்ட பயணம் மேற்கொண்ட திரு கோத்தபயாவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் சுற்றுப்பயண விசாவை வழங்கியது. வருகை அனுமதி ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.
அவருக்கு சலுகைகளோ, அரசதந்திர விலக்கோ வழங்கப்படவில்லை என்று அரசாங்கம் விளக்கியது.
முன்னாள் இலங்கை அதிபரும் சிங்கப்பூரில் எந்தப் பொது இடத்துக்கும் சென்றதாக தகவல்கள் இல்லை.
திரு கோத்தபாய விரைவில் நாடு திரும்புவார் என்று சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி கிளம்பியது.
ஆனால் அவர் நாடு திரும்பும் காலம் இன்னும் வரவில்லை என்று தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜூலை 31ஆம் தேதி வால் ஸ்த்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இலங்கைப் பொருளியலில் ஏற்பட்ட சீரழிவுக்கு திரு கோத்தபாயவும் ராஜபக்சே குடும்பமும் பொறுப்பு என்று அந்நாட்டு மக்களும் எதிர்த்தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பதவி விலகிய திரு கோத்தபாய இலங்கை திரும்பினால் அவருக்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்காது என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.