சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பேரங்காடிகள் ஜூலை மாதம் 3ஆம் தேதியிலிருந்து நெகிழிப் பைகளுக்குப் பணம் வசூலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நெகிழிப் பைக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஐந்து காசு செலுத்த வேண்டிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசக்கூடிய பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. வீடுகளில் மறுசுழற்சி்ப் பழக்கத்தை ஊக்குவிக்க முயற்சி கள் எடுக்கப்படும் நிலையில் இந்தப் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 400 பேரங்காடிகள் நெகிழிப் பைகளுக்குப் பணம் வசூலிக்கும். இது சிங்கப்பூரில் உள்ள மூன்றில் இரண்டு பேரங்காடிகளுக்குச் சமம்.
ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட், ஷெங் சியோங், பிரைம் பேரங்காடிகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பைகள் நெகிழியால் செய்யப்படாமல் வேறு பொருள்களால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்குப் பணம் வசூலிக்கப்படும்.
ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பைகளுக்கான விலை குறித்து கடந்த ஆண்டு முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோதிலும் இத்திட்டம் ஜூலை 3ல் தொடங்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பேரங்காடி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பெரும்பாலான பேரங்காடிகளில் ஒவ்வொரு நெகிழிப் பைக்கும் ஐந்து காசு வசூலிக்கப்படும் என்று இணக்கம் காணப்பட்டுள்ளது. நெகிழிப் பைகளுக்குக் கூடுதல் பணம் செலுத்துவதைவிட மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை வாடிக்கையாளர்கள் பேரங்காடிகளுக்குக் கொண்டு செல்வது நல்லது,” என்று டாக்டர் கோர் கூறினார்.
“நெகிழி, காகிதம் அல்லது மக்கிப் போகும் தன்மை கொண்ட பொருள்களால் செய்யப்பட்டிருந்தாலும் ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய பொருள்கள் தயாரிக்கப்படும்போதும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்படும்போதும் வீசப்படும்போதும் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரையில் தாக்கம் ஏற்படுத்துகின்றன,” என்று தேசிய சுற்றுப்புற வாரியமும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தெரிவித்தன.
கழிவுப் பொருள்கள் வீசப்படும் இடங்களுக்குக் கொண்டு சென்று வீசப்படுவதற்கு முன்பு ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய அனைத்துப் பைகளும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்கெனவே எரிந்து சாம்பலாகக்கூடிய அல்லது எரிக்கப்படும் இப்பொருள்களால் இயற்கையாக மக்கிப்போக முடியாது. மக்கிப் போகும் தன்மை கொண்ட பைகள் என்றாலே மறுசுழற்சி செய்யக்கூடியவை என்றாகிவிடாது. இந்நிலையில், ஜூலை 3க்கு முன்பே நெகிழிப் பைகளுக்குப் பேரங்காடிகள் பணம் வசூலிக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கார்டியன், வாட்சன்ஸ், செவன் இலவன் போன்ற சில்லறை வர்த்தகங்களும் சில பேரங்காடிகளும் நெகிழிப் பைகளுக்குப் பணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டன.