கோலாலம்பூர்: சக மலேசிய நடிகை ருஹைனிஸ் தம்மிடம் பொய் கூறியதாகவும் தம் சிங்கப்பூர் கணவரான நடிகர் அலிஃப் அஜீஸுடன் உறவு வைத்திருப்பதாகவும் மலேசியக் கலைஞர் பெல்லா ஆஸ்தில்லா குற்றம் சாட்டியுள்ளார்.
ஏப்ரல் 3ஆம் தேதி மலேசிய ஊடகங்களுக்கு பெல்லா அளித்த பேட்டி ஒன்றில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் பெவிலியன் சூட்ஸ் பகுதியில் உள்ள ருஹைனிஸின் வீட்டிற்கு எட்டு முறைக்குமேல் அலிஃப் சென்றதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறினார்.
“அலிஃப் ஓட்டிய கார் என் அன்பளிப்பாகும். எனது பெயரில் உள்ள ஒவ்வொரு காரிலும் ‘ஜிபிஎஸ்’ பொருத்தப்பட்டுள்ளது.
“அலிஃப்பின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்காக நான் அதை நிறுவவில்லை. காரை இழந்துவிடுவோமோ என்று பயப்படும் ஒவ்வொருவரும் அதை நிறுவுவார்கள் என நான் நம்புகிறேன்,” என்றார் பெல்லா, 30.
பெல்லாவின் உண்மையான பெயர் தயாங் அரா நபெல்லா அவாங் ஆஸ்தில்லா.
அலிஃப், 33, ருஹைனிஸ், 31, இருவரும் “பொருத்தமற்ற” உரையாடல்களைக் கொண்டிருந்ததற்கான ஆதாரமும் தம்மிடம் இருப்பதாக பெல்லா சொன்னார்.
காரில் குரல்பதிவுச் சாதனத்தை மறைத்து வைத்து ஆதாரத்தைப் பெற்றதாகக் கூறினார் பாடகியும் நடிகையுமான பெல்லா.
“அதைப் பற்றி மேலும் பகிர எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது, ஆனால் அவர்கள் நிறைய மோசமான விஷயங்களைப் பற்றி பேசினர்,” என்று பெல்லா குற்றம் சாட்டினார்.
இந்தக் குரல் பதிவு ஆதாரமாக நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
மலேசிய நாடகத் தொடரான ‘டெர்ஜெராட்’டில் ரூஹைனிஸுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய பின்னர் அலிஃப் “மாறிவிட்டார்” என்று பெல்லா சொன்னார்.