கொவிட்-19 தடுப்பூசி தரும் பாதுகாப்பு 18 மாதங்கள் வரை நீடிக்கலாம்
கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் கொரோனா கிருமிக்கு எதிராக 300 நாள்களுக்கும் மேலாக வலுவான நோயெதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளனர்.
எனினும், சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் குணமடைந்தோரிடம் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் நடத்திய ஆய்வுகளில், சிலரிடையே கொவிட்-19 நோயெதிர்ப்புச் சக்தி அளவு காலப்போக்கில் குறைந்துவிடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவரை பின்னர் மீண்டும் கிருமி தொற்றும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவை பிரிவு இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் இன்று (ஏப்ரல் 22) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த வெளிநாட்டு ஊழியர்களில் பலரும் கொவிட்-19 தொற்றி 300 நாள் மைல்கல்லை எட்டியுள்ளதை அவர் சுட்டினார்.
“மீண்டும் கிருமி தொற்றும் அபாயம் ஏற்படுவதை அணுக்கமாகக் கண்காணிக்கத் தொடங்குவதற்கு இது சரியான தருணம். தனிநபர்களிடையே மீண்டும் கிருமித்தொற்று ஏற்படும்போது அதைக் கண்காணிக்க நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்,” என்றார் பேராசிரியர் மாக்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட தனிநபர்களைப் பொறுத்தவரை, 15 முதல் 18 மாதங்கள் வரை அவர்கள் கிருமித்தொற்றில் இருந்து பாதுகாக்கப்படலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எனினும், அதற்கு அப்பாற்பட்டு தடுப்பூசி எந்த அளவுக்கு பாதுகாப்பைத் தரும் என்பதில் நிச்சயமில்லை.
ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு கூடுதல் தடுப்பூசி தேவைப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்வர் என்று பேராசிரியர் மாக் சொன்னார்.
“தொற்றிலிருந்து குணமடைந்த ஊழியர்களுக்கு எப்படி காலப்போக்கில் பாதுகாப்பு குறைகிறோ, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இது பொருந்தும்,” என்று பேராசிரியர் மாக் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட தனிநபர்களிடம் அதிகாரிகள் பரிசோதனை நடத்துவர் என்றும் அவர் தெரிவித்தார்.
“அவர்களது நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து வருவது தெரியவந்தால், அத்தகையோருக்குத் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தைத் தொடங்க அது சரியான நேரமாக இருக்கும்” என்று அவர் விவரித்தார்.