விஜய்யின் நாயகிக்கு கொரோனா
விஜய்யின் நாயகி பூஜா ஹெக்டே கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில், விஜய் நடிப்பில் ஜார்ஜியாவில் நடந்து வந்த ‘தளபதி 65’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒருவழியாக முடிவடைந்து சென்னைக்குத் திரும்பினர் திரைப்படக் குழுவினர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காெணாளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் ஜீவாவின் ‘முகமூடி’ திரைப்படத்தில் அறிமுகமாகி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பூஜா ஹெக்டே, தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 18 நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் விஜய்-பூஜாவின் காதல், பாடல் காட்சிகளுடன் ஒரு சில அதிரடி சண்டை காட்சிகளையும் அங்கு படமாக்கி உள்ளார் இயக்குநர் நெல்சன்.
இதன்பின்னர், படக்குழுவினர் சென்னை திரும்பிய நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதுகுறித்து பூஜா தனது டுவிட்டர் பதிவில், ‘‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன்.
“என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
“உங்கள் அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி. நான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன். தயவுசெய்து அனைவரும் வீட்டிலேயே பாது காப்பாக இருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.