முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அமெரிக்கா அனுமதி
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நவம்பர் முதல் அமெரிக்கா தனது கதவுகளைத் திறந்து விடுகிறது. கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை மீட்டுக்கொள்ள திரு பைடன் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பொருளியல் நடவடிக்கைகளுக்கு உயிரூட்டவும் குடும்பங்களைப் பிரிந்த உறவுகள் ஒன்றுசேரவும் வர்த்தகங்களுக்கு ஊழியர்களைக் கொண்டு வரவும் இந்த முடிவை வெள்ளை மாளிகை எடுத்துள்ளதாக அச்செய்தி கூறியது.
அதன் அடிப்படையில் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிப்பது என்பதற்கான உத்தேசப் பட்டியலையும் அது தயாரித்துள்ளது. ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கிரீஸ் உள்ளிட்ட ஷெங்கன் பரப்பு என அழைக்கப்படும் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ள 26 நாடுகள் அந்தப் பட்டியலில் உள்ளன.
இவை தவிர, பிரிட்டன், அயர்லாந்து, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஈரான், பிரேசில் போன்ற நாட்டினருக்கும் அமெரிக்கா அனுமதி அளிக்கும்.
நவம்பர் தொடக்கத்தில் அமெரிக்க எல்லை திறக்கப்படும் என்றும் அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கும் இடத்தில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காண்பித்தால் போதுமானது என்றும் வெள்ளை மாளிகையின் கொள்ளைநோய்ப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு ஜெஃப் ஸியென்ட்ஸ் கூறினார்.