மலேசியா: எல்லைக் கட்டுப்பாடு, பயணத் தடை விரைவில் நீக்கப்படலாம்
மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கான தடை அடுத்த மாதம் முதல் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில், நாட்டின் எல்லைகளைத் திறப்பது குறித்தும் மலேசியா பரிசீலித்து வருவதாக ‘தி ஸ்டார்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் முகைதீன் யாசின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அந்நாளிதழ் தெரிவித்தது.
கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை அனுமதிப்பது தொடர்பில் அமைச்சர்கள் இவ்வாரம் கூடிப் பேசவுள்ளனர்.
அத்துடன், மலேசியாவிற்குள் சுற்றுப்பயணிகளையும் வர்த்தகப் பயணிகளையும் அனுமதிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று நேற்று நடந்த கூட்டத்திற்குப் பின் திரு முகைதீன் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் ஆலோசிக்கப்படும் என்றும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில், மலேசியாவில் மேலும் 11,332 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு இறங்குமுகமாக இருந்த நிலையில், அது மீண்டும் கூடியது. ஆக அதிகமாக, சரவாக் மாநிலத்தில் 2,358 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.