எல்லா மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து கற்க உகந்த சூழல் இருக்காது
வரும் திங்கட்கிழமை 11ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கட்டங்கட்டமாகத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிறப்புத் தேவையுள்ளோருக்கான பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கட்டம் கட்டமாகத் தொடங்குவது பற்றி கூடுதல் விவரம் பின்னர் அளிக்கப்படும் என்றும் அமைச்சு நேற்று கூறியது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வரையிலான மாணவர்களும் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களும் வீட்டிலிருந்து பாடங்களைக் கற்று வருகின்றனர்.
பள்ளிகளில் கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்கவும் தடுப்பூசி போடுவதற்கு இன்னமும் தகுதிபெறாத 12 வயதுக்குக் கீழ் உள்ள பிரிவினரைப் பாதுகாக்கவும் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதும் அதன் நோக்கம் என்று அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில் எல்லா மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து கற்பதற்கான உகந்த சூழல் இருக்காது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு வீட்டிலிருந்து பாடங்களைக் கற்றால் அவர்களின் கல்வித்திறன், சமூக-மனநலன் ஆகியவை பாதிக்கப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.
நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவது பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து திரு சான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்தார்.