நியூயார்க்: தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகளை நாளை (நவம்பர் 8) முதல் அமெரிக்கா அனுமதிக்க உள்ள நிலையில், அங்கு செல்வதற்கான பயண முன்பதிவுகள் பலமடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொவிட்-19 தொற்று வேகமாகப் பரவியதன் காரணமாக 33 உலக நாடுகளுக்கான எல்லையை அமெரிக்கா மூடியிருந்தது. ஏறத்தாழ 18 மாதங்களாக எல்லை மூடப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, நாளை முதல் அனைத்துலகப் பயணிகளை அமெரிக்கா வரவேற்கும்.
தடை விலகுவதால், இதுவரை பிரிந்து வாழ்ந்த குடும்பத்தினரும் விரக்தியடைந்த சுற்றுப்பயணிகளும் அமெரிக்கா செல்ல பேரார்வம் காட்டி வருகின்றனர்.
எதிர்பார்ப்பைக் காட்டிலும் அமெரிக்கா செல்ல ஏராளமானோர் முன்பதிவு செய்து வருவதால், ஏர் பிரான்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற பெரிய விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை சேவையில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஏஎஃப்பி செய்தி கூறியது.
மேலும், அமெரிக்கப் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டு இருந்த சிறிய விமானங்களுக்குப் பதிலாக பெரிய விமானங்களைச் சேர்க்கும் பணியிலும் விமான நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.
தற்போது பணியில் இருக்கும் விமான ஊழியர்களைத் தக்கவைக்கும் அதே நேரத்தில் கூடுதல் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதிலும் அவை கவனம் செலுத்தி வருகின்றன.
வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியான உடனே 900 விழுக்காடு கூடுதல் முன்பதிவை பிரிட்டிஷ் ஏர்வேஸ் பெற்றது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லவும் விடுமுறைப் பயணத் திட்டங்களுக்கும் அந்த விமான நிறுவனத்தை ஏராளமானோர் நாடினர்.
அதேபோல, பிரிட்டனுக்கான முன்பதிவில் 66 விழுக்காடு அதிகரிப்பும் ஐரோப்பா செல்ல 44 விழுக்காடு அதிகரிப்பும் பிரேசில் செல்ல 74 விழுக்காடு அதிகரிப்பும் தங்கள் நிறுவனத்திடம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூறியது.