புதுடெல்லி: இந்தியாவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆந் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.
அதனுடன், ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது.
மேலும், 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இதே காலகட்டத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அந்த நாள்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவும் வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
குறிப்பாக, முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை நடத்தவும் முடிவுகளை வெளியிடவும் அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, வாக்குப்பதிவுக்கு முந்திய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்தத் தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னரும், எந்தவிதமான கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.