ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து ரூ.2 கோடிக்குமேல் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கத்தை அடையாளம் தெரியாத சில நபர்கள் திருடியதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
‘கிளார்க்ஸ் அமர்’ எனும் அந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுல் பாட்டியாவின் மகளின் திருமணம் அந்த ஹோட்டலில் நடைபெற்றது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் திரு பாட்டியா.
திரு பாட்டியாவும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அந்த ஹோட்டலின் ஏழாவது தளத்தில் உள்ள அறைகளில் தங்கியிருந்தனர்.
அவர்கள் இருந்த அறைகளில் ஒன்றிலிருந்து ரூ.2 கோடி மதிப்புடைய வைர ஆபரணங்களும் ரூ.95,000 மதிப்பிலான ரொக்கமும் திருடப்பட்டதாக போலிஸ் அதிகாரி ராதாராமன் குப்தா, பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
திருட்டுச் சம்பவம் நிகழ்ந்தபோது திரு பாட்டியா குடும்பத்தினர், திருமணத்திற்காக ஹோட்டல் புல்வெளிக்குச் சென்றிருந்தனர்.
“ராகுல் பாட்டியா எங்களிடம் அளித்துள்ள புகாரில், ஹோட்டல் ஊழியர்கள் சிலரின் உதவியுடன் திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறினார்,” என்றார் திரு குப்தா.
ஹோட்டல் வளாகத்தில் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காணொளிக் காட்சிகள் ஆராயப்பட்டு வருவதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் திரு குப்தா சொன்னார்.