சொல்வேந்தர் சுகி. சிவத்தின் தலைமையில் தமிழகத்தின் முன்னணி மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் சிங்கப்பூரில் இடம்பெறவிருக்கிறது.
‘சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?’ எனும் தலைப்பிலான இப்பட்டிமன்றம், இம்மாதம் 20ஆம் தேதி கார்னிவல் திரையரங்கில் இடம்பெறும்.
நகைச்சுவையோடு ஆழமான, சிந்திக்க வைக்கும் கருத்துக்களை மக்கள் எதிர்நோக்கலாம் என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு சுகி. சிவம். சுவையான விவாதத்தைப் படைக்க பேச்சாளர்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இருமுனைக் கத்தியை ஒத்த சமூக ஊடகங்களின் நன்மை தீமைகளை ஆராய்வதோடு நின்றுவிடாமல், சிங்கப்பூர் மக்களுக்கே உரிய சவால்களை இப்பட்டிமன்றத்தில் பேச்சாளர்கள் முன்வைக்க உள்ளனர் என்றார் அவர்.
“வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தே பார்வையாளர்களின் தவறுகளை உணர்த்துவது பட்டிமன்றத்தின் சிறப்பம்சம். இது வேறெந்த ஊடகத்திலும் சாத்தியமன்று,” என்று பட்டிமன்றங்களின் நோக்கங்களைக் குறிப்பிட்டார் திரு சுகி. சிவம்.
தமது தனித்துவமான நையாண்டி பாணிக்காக அறியப்படும் திரு மோகனசுந்தரமும் பேச இருக்கின்றார். குடும்ப ஆண்களுக்குத் தொடர்புடைய நகைச்சுவையால் ஏராளமானோரின் மனங்கவர்ந்து வரும் இவர், இவ்வாண்டு வெளிவந்த ‘துணிவு’ திரைப்படத்தின்மூலம் ஒரு நடிகராகத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
‘சமூக ஊடகங்கள் சாபமே’ எனும் அணிக்காகப் பேசவிருக்கும் திரு மோகனசுந்தரம், சிங்கப்பூரில் தனி உரையாற்றும்போதும் பட்டிமன்றத்தில் பேசும்போதும் மக்கள் தந்த ஆதரவு ஊக்கமளிப்பதாக் குறிப்பிட்டார்.
திருவாட்டி சாந்தாமணி, திரு மனோஜ் பிரபாகர் இருவரும் ‘சாபமே’ என்ற அணியில் இடம்பெற்றுள்ளனர்.
திரு ராம்குமார், திரு தேவகோட்டை இராமநாதன், திருவாட்டி அறந்தாங்கி நிஷா ஆகியோர் ‘சமூக ஊடகங்கள் வரமே’ எனும் அணிக்காக வாதிடுவர்.
சிங்கப்பூர் பட்டிமன்றங்களில் பலமுறை பட்டிமன்ற நாயகராய்ச் செயலாற்றியுள்ள திரு சுகி. சிவம், சிங்கப்பூர் பார்வையாளர்களுடன் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
“நகைச்சுவையான கருத்துகளை மட்டுமன்றி, ஆழந்த கருத்துகளையும் ஆரவாரத்துடன் வரவேற்பவர்கள் சிங்கப்பூர்த் தமிழ் மக்கள். உழைப்பாளிகளான, தன்னொழுக்கம் மிகுந்தவர்களான அவர்கள் பட்டிமன்றங்களை இன்னும் ஆக்கபூர்வமாக்குகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சீதா மீடியா, கே.எஸ். டாக்கீஸ், மாஸ்க் ஸ்டூடியோஸ் ஆகியவை இணைந்து வழங்கும் இப்பட்டிமன்றத்துக்கான நுழைவுச்சீட்டுகளை sg.bookmyshow.com/e/sukisiva என்ற இணையப்பக்கம் வழியாக வாங்கலாம்.