இந்தியாவால் தேடப்பட்டு வரும் சமய போதகர் ஸாகிர் நாயக்கை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதாக மலேசியாவின் சிரம்பான் நகர மன்ற உறுப்பினர் கே.செந்திவேலு மீது போலிசில் ஐந்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவால் தேடப்பட்டு வரும் டாக்டர் ஸாகிர் நாயக் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரை நாடு கடத்தவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை மலேசியா ஏற்கவில்லை.
இந்நிலையில், அவர் குறித்து இழிவானதொரு படத்தை திரு செந்திவேலு பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சரியாகப் பார்க்காமல் அந்தப் படத்தைப் பகிர்ந்துவிட்டதாகவும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் திரு செந்திவேலு தெரிவித்துள்ளார்.
“அந்தப் பதிவு குறித்த கருத்துகளை வாசித்த பிறகே எனது தவற்றை உணர்ந்தேன்,” என்றார் அவர்.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 6) நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டின்மீது சிவப்புச் சாயம் வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், இறந்த கோழியையும் அவரது வீட்டு வளாகத்தினுள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
நீலாய் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நள்ளிரவு 12.20 மணிவாக்கில் சிவப்புச் சாயம் நிரப்பப்பட்ட மூன்று பொட்டலங்கள் வீசப்பட்டதாக சீன நாளிதழான ‘ஓரியன்டல் டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டின் முகப்பில் நிறுத்தப்பட்டிருந்த திரு செந்திவேலுவின் கார் மீதும் தரையிலும் சிவப்புச் சாயம் கொட்டப்பட்டிருந்ததைப் படங்கள் காட்டின.
முதல்நாள் இரவு 11 மணியளவில் தாம் வீட்டிற்குத் திரும்பியதாகவும் உடனே உறங்கச் சென்றுவிட்டதாகவும் திரு செந்திவேலு கூறினார்.
தமது வீட்டில் இருந்து பெட்ரோல் போன்ற வாசம் வருவதாக அண்டைவீட்டுக்காரர் ஒருவர் கூறிய பின்னரே சிவப்புச் சாயம் வீசப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.
ஸாகிர் நாயக் மீதான தமது ஃபேஸ்புக் பதிவுக்கு அடுத்த நாள் சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தாலும் இவ்விரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை அனுமானிக்கத் தாம் விரும்பவில்லை என்றும் அதை போலிசிடம் விட்டுவிடுவதாகவும் அவர் சொன்னார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity