தங்களது ஏழு வயது மகனை, மரணம் விளைவிக்கும் வகையில் துன்புறுத்திய சந்தேகத்தில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டு, இன்று முதல் 7 நாட்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்ற துணைப் பதிவாளர் முகமது அனுவார் ஒஸ்டாடி அந்த ஆணையைப் பிறப்பித்ததாக மலாக்கா குற்றவியல் விசாரணைப் பிரிவு தலைமை துணை ஆணையர் முகமது சுக்ரி கமான் தெரிவித்தார்.
தாமன் குருபோங் ஜெயாவைச் சேர்ந்த அந்தச் சிறுவன் நேற்று மாண்டுபோனான்; அவனது 32 வயது தாயும் 38 வயது மாற்றான் தந்தையும் துன்புறுத்தியதன் காரணமாக சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று மாலை 4 மணியளவில் அவர்களது வீட்டில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியில் சிறுவன் மூழ்கியதாகக் கூறப்பட்டது.
மாண்ட சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 302ன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இதற்கிடையே, அந்தச் சிறுவனை சுமார் 6 ஆண்டுகளாக வளர்த்து வந்த 50 வயது மாது, சிறுவனை கடந்த அக்டோபர் மாதத்தில் அவனது தாயிடம் ஒப்படைத்தபோது கனத்த இதயத்துடனே அனுப்பி வைத்ததாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அப்போது உயர்கல்வி படித்துக்கொண்டிருந்ததுடன், நிதிப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியதால் சிறுவனை, தம்முடன் படித்தவரின் தாயாரின் வளர்ப்பில் விட்டிருந்தார் சிறுவனின் தாயார்.